ஞாயிறு, 29 ஜூலை, 2012















ஒன்றும் நிகழாத பொழுதொன்று
ஆகாயத்தில் மேகத்திற்குமேல் மிதக்கிறது
உடலிற்கு சாவி கொடுத்துவிட்டு
பறந்துசென்று மேலமர்ந்தது உயிர்
சுற்றிப் பார்த்தது ...
ஒலி எழுப்பியது ...
கிளர்ச்சியுடன் சிறகடித்தது ...
கூட்டிற்குள் புகுந்தது
ஒவ்வொரு நாளையும்
மரணத்திலிருந்து இழுத்துப் பறக்கிறது.

திங்கள், 23 ஜூலை, 2012


எதிர்பாராததொருநாள் வந்திறங்கியது
புத்தம்புதிய நிலைக்கண்ணாடி
நேரெடுத்து சீவிய சிகை
சிக்கோடு கலைந்திருந்தது
கறுத்திருந்தால் பரவாயில்லை சுருங்கியிருக்கிறது
உருகிய புன்னகையை சுயநினைவற்று சுமக்கும் முகம்
அடுத்த கால் பதிவு எங்கென்றறியாததை 
நடனமென்றிருந்தேன், இது நினைவு தப்புதல்
அடப்பாவி....
இரண்டு வயது புகைப்படமா
இவ்வளவு நாள் ஏமாற்றியது
உடைத்தால் கிளைக்கும் அபாயக் கண்ணாடியின் 
இருப்பு தாளாமல்
சுவரைவிட்டுத் தள்ளி ஜன்னலில் எறிந்தேன்
யார் கண்ணாவது கூசட்டும் கண்ணாடியில் பட்டு.

வெள்ளி, 13 ஜூலை, 2012

1




ஒருநாள் முடிவதற்கான துயரத்தை
காற்றில் சலசலக்கும் மரக்கிளை
தடுமாறி வீழும் இலைகள்
பாதை புரியாத ஓடையிடம் பகிர்ந்துகொண்டது
கிளைபிரிந்து தரைதொடும் வரையான காயங்களை
நிலத்தோடும் பாறையோடும் முகிலோடும்
பகிர்ந்தும் தீரா ஈரத்தோடு
பெருகியோடும் நீர்த்துளிகள்
நுரைகளை மட்டுமே வேடிக்கை பார்க்கும்
கரையில் உடைந்து கிடக்கும் மணல்.