கவிதையில் அமர்ந்திருந்த
அனைத்துப் பறவைகளையும்
விரட்டிவிடத் தோன்றியது.
எனக்கே புளிப்பதாகியிருக்கிறது
என் நிலத்தின் தானியங்கள்.
ஒரு பறவையை
பறவையென்பதையே மறந்துபோகும்படி
என்னால் செய்ய முடிந்திருக்கிறது.
சுவற்றிலும் தரையிலும் மோதிக் கத்துகிறது
மெல்லியதாய் ஒரு கணத்தில்.
எழுதுகோலை முறித்து காற்றில் கீறுகிறேன்
பறந்து… பறந்து… பறந்து ….செல்ல.
அந்தரத்தில் மிதக்கும் நான்
கீழே எட்டிப்பார்க்க நேர்ந்ததில்
என் தோலில் சொருகும்படி
கூண்டுக் கம்பியை ஓங்கிக்கொத்தியது பறவை.