வெள்ளி, 7 மார்ச், 2014

துயிலெழும் ஆன்மா 



இந்தப் பொழுதை
இரண்டு கைகளாலும்
யாரோ வாசிக்கிறார்கள்.

தகிக்கும் இத்தார்ச்சாலையில்
துயிலும் என் ஆன்மாவின் செவியருகே
குரலொன்று வளைந்துநெழிகிறது.

சப்த நெரிசலுக்கிடையில்
கொத்துச் சிறகாய் மேலெழுந்து
ஆவி அலைகிறது ;
கூடவே
மேகத்தைப்போல்
மெதுமெதுவாய்க் கலைகிறது காலம்.
அல்லது
இந்த கானத்திற்கு
நகரமே நடனமாய் அசைந்துகொடுக்கிறது.

வாகனத்தை நிறுத்திவிட்டுச்சென்று
யாரிடமோ பேசுகிறேன்
இவனென்னவோ
ஒரு பாடலுக்கு அசைப்பதைப்போல்
தலையைத்தலையை ஆட்டுகிறான்.

நன்றி : padhaakai.com


வியாழன், 6 மார்ச், 2014

பாடல் கேட்கும் நட்சத்திரம்


இந்த முன்னிரவில்
எனது அறையிலிருந்து
வானத்திற்குப் பாய்கிறதொரு நதி.
நீரில் ஒரு பாறை விழுந்து
உடைந்து
மீனாகி
நீந்திக் கரைந்து
நட்சத்திரமாகி தரையில் விழுகிறது.
நதியும் நட்சத்திரமும்
பாடல் வரியில் அல்ல வரிக்குள்
நீண்டும் நெளிந்தும் ஒளிர்ந்தும்
பூட்டிக்கொண்டு சிரிக்கின்றது.
இசையுள்ளே காற்றாம்
அறையுள்ளே வானமாம்
இரவில் நான் மின்னுகிறேனாம்
கண்களை சாத்திக்கொண்டு.

நன்றி : padhaakai.com