சனி, 13 டிசம்பர், 2014

மலைகளுக்கிடையே நொண்டும் கால்கள்










குரல்கள் மொய்க்கும்
என் வீட்டுக் குழந்தைக்கும்
ஒரு குரலும் அண்டாது
சதா சாலையில் திரிந்துகொண்டிருப்பவளுக்கும் இடையில் …
என் உள் வீட்டின் உள் அறைகளில்
தோழனொருவன்       
திடீரென விளக்கை எரியவிடுவதற்கும்
சொல்லாமல் அணைத்துவிடுவதற்கும் இடையில் …
இருகைகள் பற்றி இழுக்கும் சிறுமிகளும்
கண்கள் பற்றிப்பற்றி இழுக்கும் சிறுபெண்களும்
தீட்டும் இருவேறு நிறங்களுக்கு இடையில்  …
ஈர விரல்களோடு
பின்னிருந்து கண்பொத்தும் ஒரு கவிதைக்கும்
கண்களை கட்டிக்கொண்டு
காற்றில் வலை எறிந்தபடி இருக்கும்
இந்தக் கவிதைக்கும் இடையில் …
நான் உறைந்திருக்கும் கவிதைகள்
மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட
மெல்லிய கம்பியின்மேல் கிடக்கிறது
ஒற்றைக்காலில் நொண்டியபடி.