இன்றின் சித்திரம் என்கிற அன்றைய பாடல்
பட்சிகளுக்கு மேலாக
பறந்துகொண்டிருக்கிறது ஆகாயம்
ஞாபகம்
என்ற ஒற்றைச்சொல்மேலே
நானும்
இச்சிறுமியும்.
தொலைதூரப்
பாதையில் தன்னந்தனியாய்
கூடடையும்
பறவை
கடந்த
காலத்தின் நாளொன்று
வெட்டவெளியில் மிதக்கிறது இன்றைக்கு.
மரக்காற்று
கூடோடு சேர்ந்தசைக்கும் ராகத்தில்
புலப்படாமல்
உதிர்கிறது நிகழ்காலம்.
மரத்தடியில்
தோள்களொட்டிய பழஞ்சித்திரத்தை
எதிர்
இருக்கும் கித்தானில் தீட்டுகிறது
கடந்த
காலத்தின் ஈரம்காயாத விரல்கள்.