செவ்வாய், 4 அக்டோபர், 2016


கடவுளின் ஐஸ் வண்டி  
















மழை நனைத்துச்சென்ற காலையிலும்
நண்பகல் பிசுபிசுப்பைக் கொட்டியபடி
பதறித் தெரிக்கின்றன வாகனங்கள்.
தூக்கக்கலக்கச் சாலைகளை
திகைக்கச் செய்யவென
அதிஅவசரமாக சிலர் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களில்
கசடேறிக் கிழிந்த மனிதர்கள்
காலை வயிறுக்கு வானம் பார்ப்பவர்கள்
சாலையெங்கும் சொற்களை எறிபவர்கள்.
அந்தத் திருப்பத்தில்
இந்தக் காலையைக் குணப்படுத்த வக்கற்று
சுவரில் சாய்ந்து தலையைச் சொரிகிறார் கடவுள்.
பெரும்பாலையாய்
விரவிக்கொண்டிருக்கும் என் நகரின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
அந்தக் கடவுளை ஆசீர்வதித்துத்
தேற்றக் கிளம்புகின்றன
பள்ளிக்கூட ஆட்டோக்கள்
சாலையெங்கும் ஐஸ் கட்டிகளை இரைத்தபடி


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
Painting - Ekaterina


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக