வெள்ளி, 23 ஜூன், 2017

ஒலியின் உடல் 

















ஒரு குழந்தை காற்றில் நிறைந்திருப்பதைத்தான்
இசை என்று சொல்லி வந்தேன்.
கண்ணீர் ஆவியானதென அறிந்த தருணம்
எனது துயர அறையில் வசிக்கும் ஒருவனை நினைத்துக்கொண்டேன்.
எனதுடலே ஒலிக்கூண்டாக அதிர்ந்த சமயம்
பிறந்த கணத்தை நினைவிற்கு மீட்டெடுத்தேன்.


புதன், 21 ஜூன், 2017

மழைக்கு அருகாமையில் நின்ற பொழுதுகள்   
















ஒவ்வொரு கார்காலத்திலும்
சொற்கள்
தொப்பலாக நனைந்துவிடுகின்றன.
உன்னிடம் சொல்ல எதுவும் இருப்பதில்லை.
நமக்கிடையிலான தொலைவை
இந்தத் தண்ணீர் பதற்றமாக நீந்திக் கடக்கிறது.

24X7
காய்ந்து உருகும் தார்ச்சாலை
இருளில் கொட்டும் பேரன்பால்
திசைக்கு ஒன்றாகச் சிதறி
மழையின் வீட்டிற்குப் போய்விடுகிறது.

இருளில் மழை கொட்டுவது
நீ சிரித்துக்கொண்டே பேசுவது.

குழந்தைகளற்ற
பள்ளி வளாகத்தை
சுற்றிச்சுற்றி வருகிறது மழை.
அந்தச் சொற்களின் ஞாபகங்களால்
குழைந்து நிற்கின்றன பூமரங்கள்.

மழை அத்தனை இறகாலும் நிலம் நோக்கி அசைய…
நிலம் ஒவ்வொரு கண்ணாலும் அதிராமல் காண…

செவ்வாய், 3 ஜனவரி, 2017

சுக்குக்காப்பிக்கும் ஒரு கதை
















இன்று கண்டடைந்த 84வது சுக்குக்காப்பியும்
தனியாகத்தான் உட்கார்ந்திருந்தது.
காலகாலத்திற்கும் நெகிழ்ந்திருக்கும் அதன் சரீரம்
சிதறியிருக்கிறது துகள்துகளாக.
விரல்களால் டம்ளரை வருடுகையில்
உடலெங்கும் நீரலையும்
அதன் கதையை ஓயாமல் சொல்லுகிறது.
இவ்வளவு சனத்திரளில்
இத்தனை சிறிய மேசையில்
வந்து தேங்கியிருக்கிறது
அலைகளை விழுங்கிய கடல்.
உத்திரம் நோக்கும் அதன் வட்ட வதனம்
பரிசுத்த கண்ணாடிபோல் ....
எட்டிப் பார்ப்பவர்களை காட்டிக்கொடுத்தபடி
காலம் தள்ளுகிறது.