செவ்வாய், 19 நவம்பர், 2013

பேசாத சொல்


விடிய விடிய
சொற்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பூஜ்யத்தை மீறாத மனக்கணக்கு.
காதருகில் ஒரு சொல்
தீராத அலையடிக்கிறதா?
மற்றொரு சொல்லுக்குப்பின்
ஏறி இறங்கினேன்.
அடர் கானகத்தில்
ஒற்றையடிப் பாதைகள்
வளைந்து நீண்டு கிளைபிரிகிறதா?
மேகத்தைப்போல மிதந்துவரும்
சில சொற்கள்
உடைந்து ஈரமாக்க வேண்டுமே.
என் பெயரில் ஒரு சொல்?
சந்தடிச் சாலையோரம்
கேட்பாரற்று நின்றாலும்
என் மண்ணைத் திண்றுகொண்டே
காற்றோடும் காலத்தோடும்
லயித்தசையும் விருட்சமாக.
அவலச் சுவை தனிமையானது,
அதன் சொற்களும் தனித்தனியானது.
விடிய விடிய
காலத்தை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

சூ……………!





கவிதையில் அமர்ந்திருந்த
அனைத்துப் பறவைகளையும்
விரட்டிவிடத் தோன்றியது.
எனக்கே புளிப்பதாகியிருக்கிறது
என் நிலத்தின் தானியங்கள்.
ஒரு பறவையை
பறவையென்பதையே மறந்துபோகும்படி
என்னால் செய்ய முடிந்திருக்கிறது.
சுவற்றிலும் தரையிலும் மோதிக் கத்துகிறது
மெல்லியதாய் ஒரு கணத்தில்.
எழுதுகோலை முறித்து காற்றில் கீறுகிறேன்
பறந்து… பறந்து… பறந்து ….செல்ல.
அந்தரத்தில் மிதக்கும் நான்
கீழே எட்டிப்பார்க்க நேர்ந்ததில்
என் தோலில் சொருகும்படி
கூண்டுக் கம்பியை ஓங்கிக்கொத்தியது பறவை.


திங்கள், 1 ஜூலை, 2013


வீடு திரும்பாதவன்

















சொற்களில் மிதக்கவிட்ட நட்சத்திரங்களுக்கடியில்
வீட்டின்
காய்ந்த சிறு செடி படுத்திருக்கிறது.
ஓயாமல் வண்ணங்கள் அடித்துக்கொண்டிருக்கிறேன்
மேற்கூரையில் ஒட்டடைக்கும் மேலே
பலதிசையில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு.
என் இருண்ட பிரதேசத்தில்
அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே கிடக்கிற
அவளின்
அவனின்
அவர்களின்
அநாதைப் பிரியங்கள்
விழியசையாமல் எதையோ நோக்கியிருக்கிறது.
அவன், அவள், அவர்கள், அது, இது, எதுவும்
என் சொற்களைத் திறந்து பார்ப்பதில்லை,
என் காது கேட்காத சொற்களைத்
திறந்து பார்ப்பதில்லை.


செவ்வாய், 25 ஜூன், 2013

ப்யானோ உறைந்திருக்கிறது 







எல்லா வண்ணச் சொற்களையும்
கருப்பு வெள்ளையாக்க இழுத்துச்சென்றது
ஆலாபனைக்காலத் துவக்கம்.
ஆரோகணத்தில் ஏறிப்பார்த்த
எனது இரண்டாம் பக்கம்
அவரோகணத்தில் சரிந்தபொழுது
உனது நடுப்பக்கம் போலிருந்தது.
அசைந்துகொண்டே காற்றில் பயணிக்க வேண்டிய
ப்யானோதானே அது.
பனிக்காலமாக இறுகவைத்திருக்கிறது
ஒரு கெட்ட சொல்லாக வாசித்த இசை.



வியாழன், 25 ஏப்ரல், 2013


திறந்து மூடும் கடல்




















கடல் எல்லாப்பக்கமும் திறந்திருக்கிறது.
அசைந்துகொண்டே எங்கும் செல்லாது
தன்னில் தானே மிதந்தபடி
துளித்துளியாய் நிம்மதியையும்
துளித்துளியாய் சலனத்தையும்
கோர்த்துக்கொண்டு
கனமற்றுக் கடக்கிறது
நூற்றாண்டுகளை.

மிக உயரத்திற்குச் சென்று
உங்களைப் போலவே எனக்கும்
குதிக்கத்தோன்றியது
தினம் பெருகும் வெக்கையை
இழுத்து உறித்துவிட்ட உடலோடு.
ஆழத்தில் கரைகிறது கடலாய்.

கரையில் தவழ்ந்து போகிறது
புத்தம் புதிதான உடல்.
நான் நீராக …
எவ்வளவு இலேசாக இருக்கிறேன்.
நான் அலையாக …
எந்தப் பிடியிலும் அகப்படாமல் துள்ளுகிறேன்.
நான் கடலாக …
எல்லாத் திக்கிலும் திறந்துகொண்டேன்.

    எல்லாம் வெயில் வந்து உலர்த்தும் வரை.   

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013



நீண்ட கயிறு கொண்ட வாளியை
என் கிணற்றுக்குள் எறிந்திருக்கிறேன்
ஆடிஆடிச் செல்கிறது
என் அந்தரங்கத்தில் மோதும்
கிளர்ச்சியோடு
பிறண்டு நிமிர்ந்ததில் அள்ளிவிட்டது
உனது சொல்லை
அதன் சப்தத்தைக் கேட்காமல் சென்றுவிடாதே
கயிற்றின் வழி வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது அது
வளர்த்து வந்த பிரியத்தைக் கைமாற்ற அறியாது.