திங்கள், 16 மே, 2016
புதன், 13 ஏப்ரல், 2016
இரண்டு உடல்
ஊடுருவும் மதிய
வெயிலில்
பாலத்தின் மேலிருக்கையில்
புறாக்களின் இறக்கை
ஒலி
கேட்டுவிடக்கூடுமெனில்
எல்லாமும் மீண்டுவிடும்.
பாலம் இறங்கித்
திரும்புகையில்
பெண்ணொருத்தி கசியவிடும்
மனம் பிறழ்ந்த
புன்னகையில்
மீண்டதனைத்தும்
உறைந்துவிடும்.
எதிரே பிரியும்
இரண்டு சாலையில்
உடல் பிளந்து சென்றுவிட
வீடு செல்லும்
வழி தவறி
சாலையோரம் கிடக்கிறது
சலனமழிந்து இருண்ட
நிழல்.
•
வியாழன், 7 ஏப்ரல், 2016
நான்கு பந்துகள்
மதிற்சுவருக்கும்
பெருமரங்களுக்கும்
பின்னிருந்து வரும்
சூரியனைப் பார்த்தபடி
உருள்கிறது
மைதானத்துப் பந்து.
அணில் ஏறும் மரம்
தீண்டிய
சிறுவனின் பார்வை
உரசிப்போனது
மேற்கில் தொங்கும்
சந்திரனில்.
சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடையே
கடந்துகொண்டே இருக்கிறது
நிறமழிந்த பந்து.
கம்பத்தை நெருங்கியபடி
படபடக்கும் கால்களுக்கிடையே
இளஞ்சிவப்பு நிறமாகி
மைதானத்தின் மத்தியில்
நிலவுக்கு அடியில்
உயர்ந்து பறக்கையில்
வெள்ளை நிறமுமாகி
அதிகாலைப் பட்சிகளின்
இறகுகளை
மைதான வெளியெங்கும்
சிந்துகிறது பந்து.
நெகிழ்ந்து அசையும்
இறகுகளின் லயத்திற்கு
மைதானமே ஆடிக்கொண்டிருக்க
அரூபப் பந்தொன்று
தனியாக உருள்கிறது.
•
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
துள்ளும் வால்தான் இது
சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச்
செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும்
வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள்
ஆடி
உங்கள் விரல்களின்
இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற
பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும்
வார்த்தைகள்
நட்சத்திரங்களாய்
உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல்
அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம்
மேவுகிறது.
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
ஹிட்லர் தன் தற்கொலையைத் தள்ளிப்போடுகிறார்
ஹிட்லர்
பழைய
தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம்
நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள்
தவறாமல்
அந்தத்
துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும்
நொடிக்குமுன்
யாரும்
கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக
அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம்
கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி
சன்னல் வழியே
எச்சில்
ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான
தருணம் ஒன்று
எங்கிருந்தோ
பீடிக்க
சிலநேரம்
மிரண்டு
திசைகாணாது
தூக்கி எறிவார்.
அவரது
செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க
பற்றிவரும்
அவருக்கு
நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள்
இழகும் காலமொன்றில்
தூரிகையால்
அழுத்திக்குழைத்து
தன்உடலில்
துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.
•
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




