வெள்ளி, 7 மார்ச், 2014

துயிலெழும் ஆன்மா 



இந்தப் பொழுதை
இரண்டு கைகளாலும்
யாரோ வாசிக்கிறார்கள்.

தகிக்கும் இத்தார்ச்சாலையில்
துயிலும் என் ஆன்மாவின் செவியருகே
குரலொன்று வளைந்துநெழிகிறது.

சப்த நெரிசலுக்கிடையில்
கொத்துச் சிறகாய் மேலெழுந்து
ஆவி அலைகிறது ;
கூடவே
மேகத்தைப்போல்
மெதுமெதுவாய்க் கலைகிறது காலம்.
அல்லது
இந்த கானத்திற்கு
நகரமே நடனமாய் அசைந்துகொடுக்கிறது.

வாகனத்தை நிறுத்திவிட்டுச்சென்று
யாரிடமோ பேசுகிறேன்
இவனென்னவோ
ஒரு பாடலுக்கு அசைப்பதைப்போல்
தலையைத்தலையை ஆட்டுகிறான்.

நன்றி : padhaakai.com


வியாழன், 6 மார்ச், 2014

பாடல் கேட்கும் நட்சத்திரம்


இந்த முன்னிரவில்
எனது அறையிலிருந்து
வானத்திற்குப் பாய்கிறதொரு நதி.
நீரில் ஒரு பாறை விழுந்து
உடைந்து
மீனாகி
நீந்திக் கரைந்து
நட்சத்திரமாகி தரையில் விழுகிறது.
நதியும் நட்சத்திரமும்
பாடல் வரியில் அல்ல வரிக்குள்
நீண்டும் நெளிந்தும் ஒளிர்ந்தும்
பூட்டிக்கொண்டு சிரிக்கின்றது.
இசையுள்ளே காற்றாம்
அறையுள்ளே வானமாம்
இரவில் நான் மின்னுகிறேனாம்
கண்களை சாத்திக்கொண்டு.

நன்றி : padhaakai.com


ஞாயிறு, 12 ஜனவரி, 2014

விடிவது



எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது
சில பொழுது.
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல்
இலேசாகவும் கனமாகவும் இல்லாது.
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில்
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது,
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது
இந்த நாளை அநாதையாக்காமல்
தொட்டுத்தூக்க.


சாயம்போன ஒளியில் அணில்


பதட்டத்திலும் குழப்பத்திலும்
ஒடிந்த கிளையின் நுனிக்கு
ஓடிஓடித் திடுக்கிடுகிறது அணில்.
இந்தக் கிளைகளெல்லாம்
அரவமற்றும் குறிப்பற்றும்
காற்றுக்குள் முறியும் இயல்பானவை.
அந்தரத்தில்
அந்தக் கிளை பயணித்த
தடத்தில் தெரியும்
சாயம்போன ஒளியைப் பார்க்கிறது.
பார்த்துவிட்டுப்
பார்த்துவிட்டு
ஓடுகிறது.

புதன், 8 ஜனவரி, 2014




மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.


செவ்வாய், 19 நவம்பர், 2013

பேசாத சொல்


விடிய விடிய
சொற்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பூஜ்யத்தை மீறாத மனக்கணக்கு.
காதருகில் ஒரு சொல்
தீராத அலையடிக்கிறதா?
மற்றொரு சொல்லுக்குப்பின்
ஏறி இறங்கினேன்.
அடர் கானகத்தில்
ஒற்றையடிப் பாதைகள்
வளைந்து நீண்டு கிளைபிரிகிறதா?
மேகத்தைப்போல மிதந்துவரும்
சில சொற்கள்
உடைந்து ஈரமாக்க வேண்டுமே.
என் பெயரில் ஒரு சொல்?
சந்தடிச் சாலையோரம்
கேட்பாரற்று நின்றாலும்
என் மண்ணைத் திண்றுகொண்டே
காற்றோடும் காலத்தோடும்
லயித்தசையும் விருட்சமாக.
அவலச் சுவை தனிமையானது,
அதன் சொற்களும் தனித்தனியானது.
விடிய விடிய
காலத்தை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

சூ……………!





கவிதையில் அமர்ந்திருந்த
அனைத்துப் பறவைகளையும்
விரட்டிவிடத் தோன்றியது.
எனக்கே புளிப்பதாகியிருக்கிறது
என் நிலத்தின் தானியங்கள்.
ஒரு பறவையை
பறவையென்பதையே மறந்துபோகும்படி
என்னால் செய்ய முடிந்திருக்கிறது.
சுவற்றிலும் தரையிலும் மோதிக் கத்துகிறது
மெல்லியதாய் ஒரு கணத்தில்.
எழுதுகோலை முறித்து காற்றில் கீறுகிறேன்
பறந்து… பறந்து… பறந்து ….செல்ல.
அந்தரத்தில் மிதக்கும் நான்
கீழே எட்டிப்பார்க்க நேர்ந்ததில்
என் தோலில் சொருகும்படி
கூண்டுக் கம்பியை ஓங்கிக்கொத்தியது பறவை.